விஷம் கலந்த நெல் உட்கொண்ட 3 மயில்கள் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்கா, கொத்தமங்கலம் வடக்கு ஊராட்சி பனசக்காடு கிராமத்தில் விஷம் கலந்த நெல்மணிகளைச் சாப்பிட்டதால் 3 மயில்கள் உயிரிழந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்திய வனத்துறையினர், பெண் விவசாயி ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புதுக்கோட்டை வனச்சரகம், ஆலங்குடி பிரிவுக்குட்பட்ட கொத்தமங்கலம் வடக்கு ஊராட்சி பனசக்காடு கிராமம் அருகே மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் சோ.கணேசலிங்கம் உத்தரவின் பேரில், புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் சதாசிவம், வனவர்கள் முருகானந்தம் மற்றும் பா.சிவரஞ்சனி ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில், தமிழ்செல்வன் மனைவி செல்வி என்பவருக்குச் சொந்தமான வயல் பகுதிக்கு அருகில் உள்ள தென்னந்தோப்பில் 1 ஆண் மயில் மற்றும் 2 பெண் மயில் என மொத்தம் 3 மயில்கள் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.  வனத்துறையினரின் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. செல்விக்குச் சொந்தமான நிலத்தில் விதைக்கப்பட்ட நெல்மணிகளை அதிக எண்ணிக்கையிலான எலிகள் சேதப்படுத்தியுள்ளன.

இந்த எலிகளை அழிக்கும் நோக்கில் செல்வி, பூச்சி மருந்து கலந்த நெல்மணிகளை ஆங்காங்கே தூவி இருந்தார். அவ்வழியாக உணவு தேடி வந்த தேசியப் பறவையான மயில்கள் அந்த விஷம் கலந்த நெல்மணிகளை உட்கொண்டதால் இறந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, குற்றவாளியான செல்வி மீது வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972-ன் கீழ் வன உயிரினக் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் மணமேல்குடி குற்றவியல் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். இறந்த 3 மயில்களின் உடல்களையும் கொத்தமங்கலம் உதவி கால்நடை மருத்துவர் டாக்டர் அசோகன் பிரேதப் பரிசோதனை செய்தார். இச்சம்பவம் குறித்து மாவட்ட வன அலுவலர் சோ. கணேசலிங்கம் அவர்கள் பேசுகையில், “வன உயிரினங்களை வேட்டையாடுதல் அல்லது விஷம் கலந்த உணவினை மற்ற உயிரினங்களுக்காக வைப்பதினால் வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972 இ-ன் கீழ் சட்டப்படியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என எச்சரித்தார். இந்தியாவில் மயில்கள் உட்படப் பல உயிரினங்கள் இந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. மயில், இந்தச் சட்டத்தின் அட்டவணை I-ல் (Schedule I) இடம் பெற்றுள்ளதால், அதைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது பிணையில் வெளிவர முடியாத கடுமையான குற்றமாகும். இந்தச் சட்டத்தின் கீழ் குற்ற நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

Exit mobile version