தமிழ் சினிமாவின் வெற்றிச் சக்கரவர்த்தியாக திகழும் இயக்குநர் வெற்றிமாறன், தற்போது ஒரு தனிப்பட்ட பேட்டியில் கலந்து கொண்டு தனது சினிமா பயணம், எதிர்பார்ப்புகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான கருத்துகளை பெற்றிருந்தாலும், வசூலில் சிறந்த சாதனையை பதிவு செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது அவர் இயக்கும் அடுத்த படம் வாடிவாசல், மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டுக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபன் டாக் நிகழ்ச்சியில் வெளிப்படையான பதில்கள்
ஓபன் டாக் நிகழ்ச்சியில் தனது சினிமா பயணத்தைப் பற்றி பேசும் போது, வெற்றிமாறன் கூறிய சில விஷயங்கள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“ஒரு படத்தை எடுத்து முடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை இயக்குனரைத் தவிர யாரும் தீர்மானிக்க முடியாது, தீர்மானிக்க கூடாது,” என்றார் அவர்.
மேலும், “சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வந்தார். அவரை பார்க்கும்போது 20 வருடங்களுக்கு முன் என்னை பார்த்தது போல் இருந்தது. இன்று சினிமாவில் பெண்களின் வளர்ச்சியை காணும் போது மகிழ்ச்சி அடைகிறேன்,” என உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.
‘காதல் படங்கள் எனது தேர்வு, ஆனால்…’
“நான் வன்முறை படங்களை விட, காதல் படங்களை தான் அதிகம் தேர்வு செய்வேன். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக உள்ளது. அதனால் தான் காதல் படங்கள் கைகூடாமல் போய்கொண்டு இருக்கின்றன,” என கூறினார்.