மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா:- வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து இந்த ஆண்டுமுழுவதும் 150-வது ஆண்டை கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி நெகிழ்ச்சி:-
மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ நாராயணசாமி பெயரில் செயல்படும் இப்பள்ளி, கல்கி உள்ளிட்ட ஏராளமான தமிழறிஞர்கள், பேராசிரியர் க.அன்பழகன் உள்ளிட்ட அரசியல் ஆளுமைகள், 8 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஏராளமான அரசுத்துறை அதிகாரிகளை உருவாக்கியுள்ளது. இப்பள்ளியில் நடைபெற்ற 150-வது ஆண்டு விழாவில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பங்கேற்று, ஆண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டு, கல்வெட்டை திறந்து வைத்தார். சிறப்பு மலரை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ராஜேஷ், ராமன், சிவபெருமான், ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தமிழ்நாட்டில் பள்ளி தொடங்கப்பட்டு 150 ஆண்டுகளை கடந்த பள்ளிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இப்பள்ளியும் ஒன்று என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். இந்த பள்ளியில் படித்த பல மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள். அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது படிக்கும் மாணவர்கள் நன்கு படித்து வாழ்வில் நல்ல நிலைக்கு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆசிரியர்களும் அதற்கேற்றவாறு மாணவர்களை ஊக்கப்படுத்தி ஆண்டுகள் கடந்த பின்னும் மாணவர்கள் நினைவில் கொள்ளும் வகையில் கற்பிக்க வேண்டும். இப்பள்ளியின் 150-ஆவது ஆண்டு விழாவானது ஒருநாள் மட்டும் நடைபெறும் விழாவாக அல்லாமல் இவ்வாண்டு முழுவதும் கொண்டாடப்பட வேண்டும். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஒன்றுகூட இயலாது என்பதால், முன்னாள் மாணவர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து, இப்பள்ளியில் பயின்று தற்போது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து, முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பல்வேறு தலைப்புகளின்கீழ் இவ்வாண்டு முழுவதும் 150-வது ஆண்டை கொண்டாட வேண்டும். முன்னாள் மாணவர்களிடமிருந்து இப்பள்ளியில் பயின்ற நினைவுகளை சேகரித்து புத்தகமாக வெளியிட வேண்டும். அதன்மூலம் வருங்காலங்களில் இப்பள்ளியில் சேர்ந்து பயில மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் என்றார். விழாவில், நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.














