பெங்களூர், மே 20 : பெங்களூருவில் கடந்த 12 மணிநேரத்தில் 130 மில்லிமீட்டர் மழை பதிவாகிய நிலையில், இந்த கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வியாழக்கிழமை இரவிலிருந்து தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை தொடர்ந்தது. இதன் விளைவாக ஜெயநகர், ஜக்கசந்திரா, கோரமங்கலா உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததோடு, சாலைகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
மிக்கோ லே அவுட் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 63 வயது முதியவர் மற்றும் 12 வயது சிறுவன் உயிரிழந்தனர். வொயிட்பீல்டு பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் சிறிய வகை படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். தற்போது, இந்திய வானிலை மையம் பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’யை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் என். புவியரசு கூறும்போது,
“பெங்களூரில் மீண்டும் 80 முதல் 100 மி.மீ. வரை கனமழை பெய்யக்கூடும். நகர்ப்புறங்களில் நீர்வடிகால் அமைப்புகள் தடைபட்டிருப்பதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என தெரிவித்தார்.
மேலும், பாகல்கோட், பெலகாம், சிக்கல்லபுரா, தார்வாட், கடக், கொப்பல், கோலார், விஜயநகரா பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
முகாம்போன்ற பகுதிகளில் தற்போது மீண்டும் மழை தீவிரமடைந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.