கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சிக்கு சொந்தமான பழைய இரும்பு பைப்புகள் உள்ளிட்டவற்றை நேற்றைய தினம் பேரூராட்சி ஊழியர்கள் பேரூராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றி கொண்டு அதே பகுதியில் அமைந்துள்ள ஆக்கர் கடையில் எடைபோட்டு விற்பனை செய்ய முயன்றுள்ளனர். இதனை அந்த பகுதியில் நின்றிருந்த பொதுமக்களில் சிலர் வீடியோ எடுத்தனர். இது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி ஊழியர்களிடம் கேட்ட போது பேரூராட்சி அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அவற்றை விற்கிறோம் என கூறியுள்ளனர். இதைக்கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிறிது நேரத்தில் விற்பனை செய்ய எடுத்து வந்த பொருட்களை மீண்டும் வாகனத்தில் ஏற்றி பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்று இறக்கி வைத்தனர். தற்போது இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.