வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு:
கீழ் திசை நாடுகளின் ரோம் நகரம் என அழைக்கப்படும் உலக பிரசித்தி பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று இரவு ஈஸ்டர் திருநாளையொட்டி ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் திருப்பலி தொடக்கத்தில் பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் ‘‘பாஸ்காஒளி’’ யை பேராலய அதிபர் இருதயராஜ் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து பிரார்த்தனைகள் தொடங்கின. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி அளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்புதிருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பங்குதந்தை அற்புதராஜ் மற்றும் பாதிரியார்கள் உள்ளிட்ட அருட்சகோதரிகள் கலந்துகொண்டனர்.
