மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அகலங்கன் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 11ஆம்தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது இவரது உறவினரான சித்தப்பா சீமான் என்பவரின் வீட்டு நாய் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மணிகண்டன் மீது விழுந்துள்ளது.

இது தொடர்பாக உறவினர்களிடையே வாய் தகராறு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டனின் சகோதரர் மகேந்திரன் என்பவர், சீமான் (50), சீமானின் மகன் சந்தோஷ் (25) சீமானின் பேரன் சபரீஷ் ஆகிய 3 பேரையும் அறிவாலால் வெட்டி உள்ளார். படுகாயம் அடைந்த மூன்று பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீமானின் மகன் சந்தோஷ் அளித்த வாக்குமூலத்தின் படி போலீசார் கொலை முயற்சி கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தலையில் வெட்டுபட்ட சீமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கொலைவழக்காக மாற்றம் செய்யப்பட்டது. உறவினர்களிடையே ஏற்பட்ட நாய் பிரச்சனை கொலையில் முடிந்தது கிராமத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.