போட்ஸ்வானாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 200 யானைகள் மற்ற பூங்காக்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2024ல் நடத்தப்பட்ட வான்வழி கணக்கெடுப்பு, சேவ் வேலி கன்சர்வேன்சி என்ற காப்பகத்தில் 2,550 யானைகள் இருப்பதாகக் காட்டுகின்றது. ஆனால், இந்த காடு 800 யானைகளைத் தாங்கும் திறனை மட்டுமே கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் அதிகரித்து வரும் யானை எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஜிம்பாப்வே நாட்டில் டஜன் கணக்கான யானைகளைக் கொன்று, அந்த இறைச்சியை மக்களுக்கு உணவாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஜிம்பாப்வே வனவிலங்கு ஆணையம் சொல்லி இருக்கிறது.
யானைகளை சுட்டுக்கொல்லும் நடவடிக்கையில் பெறப்படும் யானை இறைச்சி, உள்ளூர் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும், ஆனால் தந்தங்கள் அரசாங்கத்தின் சொத்தாகும், அவை பாதுகாப்பிற்காக Zimparksக்கு ஒப்படைக்கப்படும் என சொல்லப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், ஜிம்பாப்வே கடுமையான வறட்சியை எதிர்கொண்டபோது, உணவுப் பற்றாக்குறை காரணமாக 200 யானைகள் கொல்லப்பட்டன என்பது குறிப்பிடதக்க விஷயமாக உள்ளது.