“உங்கமேல தப்பு இல்லை” – பாதிக்கப்பட்டவர்கள் விஜயிடம் தெரிவித்தது என்ன ? அருண்ராஜ் பகிர்ந்த தகவல்

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் இன்னும் பேசுபொருளாகவே தொடர்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அரசு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக தரப்பில் ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கரூர் மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் விஜய் பேசிச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த வீடியோ அழைப்பின்போது தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு பொதுச் செயலாளரும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரூரில் ஊடகங்களிடம் பேசிய அருண்ராஜ், “கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் குடும்பத்தினரிடம் எங்கள் தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார். அந்த நேரத்தில் பலர், ‘சார்… உங்கமேல தப்பு இல்லை. நீங்க தைரியமா இருங்க. நீங்க சொன்ன வார்த்தை எங்களுக்கு ஆறுதலா இருக்கு. இதை விட்றாதீங்க, தொடர்ந்து போராடுங்க. நாங்க எப்போதும் உங்க கூட இருப்போம்’ என்று விஜயிடம் கூறினர்,” என தெரிவித்தார்.

அருண்ராஜ் மேலும், “எல்லா குடும்பங்களும் இதேபோலவே கூறினர். விரைவில் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்க உள்ளார். இதற்காக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று நேரில் அனுமதி பெற உள்ளோம். அரசின் நடவடிக்கைகள் குறித்து இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை,” என்றார்.

Exit mobile version