யோகா என்றால் “சேர்ப்பது” – சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி உரை !

உலகம் முழுவதும் இன்று 11வது சர்வதேச யோகா தினம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு தனி கருப்பொருளுடன் கொண்டாடப்படும் யோகா தினம், இந்த ஆண்டு “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்” என்ற கருப்பொருளில் உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் ஒரு முக்கிய பகுதியாக, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சுமார் 5.5 லட்சம் பேர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இது கின்னஸ் சாதனை நிகழ்வாக அமைந்துள்ளது.

பிரதமர் மோடி இந்த நிகழ்வில் யோகாசனம் செய்ததோடு, விழாவில் உரையும் ஆற்றினார். அவரது உரையின் முக்கியப் பகுதி :

“சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று முழு உலகமும் யோகா செய்கிறது. யோகா என்றால் ‘சேர்ப்பது’ என்று பொருள். அது உலகத்தையும் மனிதர்களையும் இணைக்கும் சக்தி.

யோகா என்பது வெறும் உடற்கட்டுப்பாடான பயிற்சியாக மட்டும் அல்ல; அது உலக ஒற்றுமைக்கான திறவுகோலும் கூட. ஒவ்வொரு தேசமும் இதனை ஏற்றுக்கொண்டு சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.

உடல் பருமன் என்பது இன்றைய உலகில் பெரும் சவாலாக மாறியுள்ளது. யோகா மூலம் அதை 10 சதவீதம் குறைக்கலாம் என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் கூறியிருந்தேன். இந்த சவாலை மக்கள் மனதார ஏற்க வேண்டும்.

2014-ஆம் ஆண்டு, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. அதன் பிறகு 174 நாடுகள் யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளன. உலக நாடுகளை ஒன்றிணைக்கும் சக்தியாக யோகா உருவெடுத்துள்ளது.

ஜூன் 21-ம் தேதியை யோகா தினமாக அறிவிக்க இந்தியா ஐ.நா-வில் தீர்மானம் கொண்டு வந்ததையும், 175 நாடுகள் அதனை ஆதரித்ததையும் நான் பெருமையுடன் நினைவுகூருகிறேன். இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல” என பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு யோகாவின் உலகளாவிய ஏற்றத்தையும், இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களை உலகத்திற்கு கொண்டு செல்வதிலும் முக்கியமான ஒரு பரிமாணமாக அமைந்துள்ளது.

Exit mobile version