ஆசியாவின் மிகப்பெரிய பின்னலாடை இயந்திரங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பக் கண்காட்சிகளில் ஒன்றான ‘ஹைடெக்–2026’ (KNIT-TECH), பின்னலாடை நகரமான திருப்பூரில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. திருப்பூர் திருமுருகன்பூண்டி ரிங் சாலையில் அமைந்துள்ள ஹைடெக் திருப்பூர் கண்காட்சி மைய வளாகத்தில், 18-வது ஆண்டாக நடைபெறும் இந்தச் சர்வதேச கண்காட்சியை, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (AEPC) தலைவர் ஏ.சக்திவேல் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். சுமார் 1.90 லட்சம் சதுர அடி பரப்பளவில், முழுமையான குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட வளாகத்தில் ஜவுளித்துறையின் எதிர்காலமே அணிவகுத்து நிற்கிறது.
தொடக்க விழாவிற்கு நிட்-டெக் கண்காட்சி தலைவர் ராயப்பன் தலைமை தாங்கினார். நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி முன்னிலை வகிக்க, கண்காட்சியின் அதிகாரப்பூர்வ கையேட்டை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.என்.சுப்பிரமணியம் வெளியிட்டார். இதனை தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் திருப்பூர் சாய ஆலைகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காந்திராஜன், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்த ஆண்டு கண்காட்சியின் சிறப்பம்சமாக, ஜப்பான் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட தையல் இயந்திரங்கள் மற்றும் துருக்கியின் குறைந்த தண்ணீரில் சாயமேற்றும் சுற்றுச்சூழல் நட்பு இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. ஜெர்மனி, இத்தாலி, தைவான், சீனா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 250 முன்னணி நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் தங்களது நவீனத் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இத்தொழில்நுட்பங்களை எளிதில் கையகப்படுத்த மத்திய அரசு ரூ.80 ஆயிரம் வரை மானியம் வழங்கியுள்ளதாகத் தலைவர் ராயப்பன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஏ.சக்திவேல், “இந்தியா 37 நாடுகளுடன் மேற்கொண்டுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உலக மக்கள் தொகையில் 67 சதவீத சந்தையை நாம் நெருங்க முடியும். வரும் ஏப்ரல் 15 முதல் இங்கிலாந்து சந்தை நமக்கு வரியில்லாமல் திறக்கப்பட உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய ஜவுளித்துறை அசுர வளர்ச்சி காணும்,” என நம்பிக்கை தெரிவித்தார். தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஏ.ஐ. இயந்திரங்களே இனி தீர்வாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியைப் பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம். சுமார் 35 ஆயிரம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிட்-டெக் இணை நிர்வாக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி நன்றியுரையுடன் தொடக்க விழா நிறைவடைந்தது.
















