மகளிர் உலகக் கோப்பை வெற்றி : 36 வயதில் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்த வரலாறு !

இந்திய மகளிர் அணி, உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் தங்களது பெயரை பொற்கொல்லாகப் பதித்துள்ளது. 2005, 2017, 2020 என மூன்று முறை இறுதிப் போட்டி வரை சென்றும் வெற்றி பெற முடியாத இந்தியா, இம்முறை அந்தக் கனவை நனவாக்கியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற 2025 மகளிர் உலகக் கோப்பை தொடரில், தொடக்கத்தில் சில தடுமாறல்களை சந்தித்தாலும், அரையிறுதியில் வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, இறுதியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இத்தொடரில் 36 வயதான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “உலகக் கோப்பையை வென்ற மிக வயதான மகளிர் கேப்டன்” என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வெற்றிக்குப் பிறகு நெகிழ்ச்சியில் கண்ணீர் மல்கிய ஹர்மன்ப்ரீத், “இது எனது கனவின் நிறைவு; இந்திய மகளிர் கிரிக்கெட்டின் புதிய யுகம் இது” என்று தெரிவித்தார்.

முன்னதாக ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, நான்கு முறை வென்ற இங்கிலாந்து, ஒருமுறை வென்ற நியூசிலாந்து ஆகியவற்றின் வரிசையில் இந்தியா இப்போது இடம்பிடித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன், போட்டிக்கு முன் “இந்திய ரசிகர்களை அமைதியாக்குவேன்” என சவால் விட்டிருந்தார். ஆனால் இறுதியில் அவரது அணி தோல்வியடைந்தது. அவரே அதிகபட்சமாக 101 ரன்கள் எடுத்திருந்தபோதிலும், வெற்றியை இந்தியா பறித்துக் கொண்டது.

இந்திய மகளிர் அணியின் வரலாற்றுச் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர். சமூக வலைதளங்களில் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அவரது அணிக்கு வாழ்த்துகள் மழையாக குவிந்துள்ளன.

Exit mobile version