தமிழக அரசின் மிக முக்கியமான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்கள் தாலுகா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்குத் திரண்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்கட்டமாக 3 லட்சத்து 99 ஆயிரத்து 350 பெண்கள் பயன் பெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்டமாகத் தகுதியுள்ள நபர்களைச் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதற்காக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் மற்றும் ஓய்வூதியதாரர் குடும்பத்தைச் சேர்ந்த தகுதியுள்ள பெண்களுக்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் வாயிலாகப் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால், தற்போது விண்ணப்ப நிலவரம் குறித்த குறுஞ்செய்திகள் (SMS) வரத் தொடங்கியுள்ள நிலையில், நிராகரிக்கப்பட்ட பெண்கள் அதிகாரிகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 55 ஆயிரத்து 108 பெண்கள் உரிமைத்தொகை பெறப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, விண்ணப்பம் செய்த பல பெண்களுக்கு ‘நிராகரிக்கப்பட்டது’ எனத் தகவல் வந்ததால், அவர்கள் ஆத்திரத்துடன் தாராபுரம் மற்றும் திருப்பூர் ஆர்.டி.ஓ (RDO) அலுவலகங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, 2023-ஆம் ஆண்டிலேயே விண்ணப்பித்து இதுவரை பலன் கிடைக்காதவர்களும், வருமான வரி தாக்கல் செய்யும் குடும்ப உறுப்பினர்களும் “எங்களுக்கு ஏன் இன்னும் உரிமைத்தொகை கிடைக்கவில்லை?” என்று கேள்விக்கணைகளைத் தொடுத்து வருவதால், அலுவலகப் பணியாளர்கள் அவர்களுக்கு உரியப் பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தங்களுக்கு எப்படியும் உரிமைத்தொகை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், வருமான வரி செலுத்துதல், சொத்து மதிப்பு மற்றும் அரசு விதித்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் பல விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களுக்கு வரும் பெண்களிடம், ஆன்லைன் மூலம் மேல்முறையீடு செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமலும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விளக்கம் அளிக்க முடியாமலும் வருவாய்த்துறை அலுவலர்கள் பெரும் நெரிசலைச் சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழலால் திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய அரசு அலுவலகங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

















