சித்தூர் (ஆந்திரா): கடனை திருப்பி செலுத்த முடியாததைக் காரணமாகக் கொண்டு, ஒரு பெண்ணை மரத்தில் கட்டி அடித்து மிரட்டிய கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் சித்தூரில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பன் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஷா தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குடும்ப செலவுக்காக திம்மராயப்பன், அதே பகுதியில் வசிக்கும் முனிகண்ணப்பா என்பவரிடம் வட்டியுடன் ரூ.80,000 கடனாக பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில், திம்மராயப்பன் தனது குடும்பத்துடன் அருகிலுள்ள மற்றொரு கிராமத்திற்குச் சென்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில், தனது மகனின் பள்ளி சான்றிதழை பெறுவதற்காக ஸ்ரீஷா இன்று (ஜூன் 19, 2025) நாராயணபுரத்திற்கு வந்தார்.
இதையறிந்த முனிகண்ணப்பா, தனது கூட்டாளிகளுடன் ஸ்ரீஷாவை முற்றுகையிட்டு, கடன் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, ஆபாசமாக பேசி, அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஒரு வேப்ப மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியதாக புகார் உள்ளது. மேலும், “கடனை வட்டியுடன் உடனடியாக செலுத்த வேண்டும்” என மிரட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஸ்ரீஷாவை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முனிகண்ணப்பா உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பத்தில் நடந்துள்ளதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,
“இந்த கொடூர சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்படும்,” என்றார்.