பெங்களூருவில் சமீபத்தில் நடந்த ஒரு விசித்திரமான மற்றும் சுவாரசியமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு இளம்பெண் உபர் கேப் மூலம் பயணம் செய்ய திட்டமிட்டு கேப் அழைத்தார். ஆனால் அவரைப் பிக்கப் செய்ய வந்த டிரைவரை பார்த்ததும், அவர் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்ட அனுபவம் தெரிவித்துள்ளார். காரணம் – அந்த டிரைவர் வேறு யாரும் இல்லை; அவரே வேலை செய்யும் நிறுவனத்தின் டீம் லீடர்!
இதை “பெங்களூருவின் சிகப்பு தருணம்” எனக் கூறிய அந்த பெண், வாட்ஸ்அப்பில் நண்பருடன் பேசிய ஸ்கிரீன்ஷாட்டை X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த மெசேஜில், “நான் உபர் புக் பண்ணினேன். என்னை பிக்கப் பண்ண வந்தவர் நம் ஆபிஸ்ல இருக்குற டீம் லீடர்!” என எழுதியுள்ளார். டீம் லீடரிடம் கேள்வி கேட்டபோது, அவர் “சாதாரணமாக வேலை செய்யும் சலிப்பை குறைக்கவும், வாழ்க்கையில் ரிலாக்ஸ் கிடைக்கவும் இதை செய்கிறேன்” என பதிலளித்ததாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம் இணையத்தில் பரவத் தொடங்கியவுடன் பல்வேறு கருத்துக்களும் கடந்து சென்றன. சிலர் இதை நகைச்சுவையாக பார்த்துள்ளனர். “பெங்களூர் போக்குவரத்தில் பல மணி நேரம் சிக்கித் தவிக்கும் நேரத்தையும் ரிலாக்ஸாகக் காண்பது அசத்தல்” என ஒருவர் பதிவு செய்துள்ளார்.
மற்றொருவர், “இந்தியாவில் மட்டும் தான் ஒரு டீம் லீடர் கேப் ஓட்டுவதைக் பெரிய விஷயமா பார்க்கிறார்கள். உண்மையான எளிமை இது தான்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் மற்றுமொரு பக்கம், சிலர் நிதி பிரச்சனைகள் காரணமாக இதுபோன்ற வேலைகளை தேர்வு செய்யும் நிலை வரக்கூடும் எனவே, இதைக் காமெடியாக மட்டுமே பார்க்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுபோல், கடந்த 2024 ஜூலை மாதம், மைக்ரோசாஃப்ட்டில் வேலை செய்யும் 35 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர், வார இறுதிகளில் தனிமையை தவிர்க்க ஆட்டோ ஓட்டும் சம்பவமும் வைரலானது. அவர் தன் நிறுவன டீசர்ட் அணிந்து ஆட்டோ ஓட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியது.
இவ்வாறான சம்பவங்கள், பணியிடம், தாழ்மையான மனப்பான்மை, தனிமை எதிர்ப்பு, போன்ற பல்வேறு சமூக மற்றும் மனித உணர்வுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருக்கின்றன.