40 சதவீத வாக்கு வங்கியுடன் விஜய்க்கு மக்கள் சிவப்புக் கார்பெட்டில் வரவேற்பு!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகபாளையம் பிரிவு பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மேற்கு ஒன்றியத்திற்கான புதிய கிளை அலுவலகம் மிகுந்த உற்சாகத்துடன் திறக்கப்பட்டது. கட்சியின் நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் கலந்துகொண்டு, நாடாவினை வெட்டிப் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்துப் தொண்டர்களிடையே உரையாற்றினார். தைப்பூசம் எனும் மங்கலத் திருநாளில் இந்த அலுவலகம் திறக்கப்படுவது கட்சிக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுக்கும் எனத் தெரிவித்த அவர், தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்க மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கழகத் தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சராக வர வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தார். ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய் வருமானத்தை வழங்கக்கூடிய தனது திரையுலகப் புகழைத் துறந்து, தமிழக மக்களுக்கு ஊழலற்றத் தூய ஆட்சியை வழங்கும் உன்னத நோக்குடன் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். தற்போதைய கள நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகத்திற்கு சுமார் 40 சதவீத வாக்கு வங்கி இருப்பதாகவும், இது வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை உறுதி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அண்ணா திமுகவில் ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க முடியாத நிலை உள்ளதாகக் கூறி அக்காட்சியினை அவர் விமர்சித்தார்.

கூட்டணி தொடர்பான முடிவுகளை உரிய நேரத்தில் தலைவர் விஜய் அறிவிப்பார் என்றும், சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் குறித்த அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். தலைவர் விஜய் மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்கும்போது செய்தியாளர்களைச் சந்திப்பார் என்றும், அவரது குரல் இந்தியா முழுவதும் எதிரொலித்து ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் த.வெ.க. மேற்கு மாவட்டச் செயலாளர் பிரதீப் குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் குழுத் தலைவர் வக்கீல் மவுலீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், ஈரோடு மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் அனுராதா, கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழரசு, இணைச் செயலாளர் நவநீதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் குறிஞ்சிநாதன், செந்தில்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Exit mobile version