தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என சிபிசிஐடி தரப்பிற்கு ஊட்டி நீதிமன்ற நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, பங்களாவிலிருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறுவிசாரணை முடுக்கிவிடப்பட்டது. அப்போது தடயங்களை அழித்ததாகக் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சுமார் 316 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர்.
விசாரணையில் ஏற்பட்ட மந்தநிலை குறித்து அதிருப்தி வெளியிட்ட நீதிபதி, “விசாரணையை முடிக்க இன்னும் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்வீர்கள்?” என வினவினார். இதற்குப் பதிலளித்த சிபிசிஐடி அதிகாரிகள், “இதுவரை 269 சாட்சிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வழக்கில் தொடர்புடையவர்களின் செல்போன் உரையாடல்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகள் குறித்த ஆய்வறிக்கைக்காகக் குஜராத்தில் உள்ள பிஎஸ்என்எல் (BSNL) ஆய்வகத்திற்கு விண்ணப்பித்துள்ளோம். அங்கிருந்து இன்னும் முடிவுகள் வராததே இந்தத் தாமதத்திற்குக் காரணம்,” என்று விளக்கம் அளித்தனர். இதனையேற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

















