மடப்புரம் கோயில் காவலாளி மரண வழக்கு டிஎஸ்பி-யை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளiamman கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை போலீசாரின் விசாரணையின்போது மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மீதான பிடி இறுகியுள்ளது. கோயிலில் நகை மாயமான புகாரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீசாரின் சித்திரவதையால்தான் உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கைச் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இக்கொலை வழக்கில் ஏற்கனவே தனிப்படையைச் சேர்ந்த காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு மற்றும் சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கின் பின்னணி குறித்து சிபிஐ நடத்திய விரிவான விசாரணையில், காவலாளி உயிரிழந்த சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்ஐ சிவக்குமார் மற்றும் ஏட்டு இளையராஜா ஆகியோருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இவர்கள் நான்கு பேரையும் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்தனர். தங்களுக்கு எதிராகக் கைது நடவடிக்கை பாயக்கூடும் என அஞ்சிய மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி எஸ்.ஸ்ரீமதி அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகைதீன் பாட்சா, இது மிகக் கடுமையான லாக்-அப் மரண வழக்கு என்பதால், மனுதாரருக்கு எக்காரணம் கொண்டும் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள டிஎஸ்பி-யை ஏன் இன்னும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யவில்லை என அதிரடியாகக் கேள்வி எழுப்பினார். நீதிபதியின் இந்தச் சரமாரி கேள்வியைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது முன்ஜாமீன் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிஎஸ்பி சண்முகசுந்தரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்தக் கடுமையான போக்கைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டிஎஸ்பி உள்ளிட்ட நான்கு போலீஸ் அதிகாரிகள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. சாதாரணக் காவலாளி ஒருவரின் மரணத்திற்கு நீதி கோரித் தொடரப்பட்ட இந்த வழக்கில், உயர்மட்ட அதிகாரிகள் மீது சிபிஐ எடுத்து வரும் நடவடிக்கை காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version