தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது. கடைகள் படிப்படியாக மூடப்படும்” என தமிழ்நாடு அரசு தரப்பில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தகவல் தெரிவிக்கப்பட்டது
மதுரை கைத்தறி நகரில் மதுபான கடை திறக்க தடை கோரி மேகலா என்பவர் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.பி.ஜீவா வாதாடினார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, ” ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்கிறது. நம் வீட்டு பிள்ளைக்கு இதுபோல செய்வோமா? கொள்கைகள் முரணாக உள்ளன. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முறைப்படுத்திய அரசு, டாஸ்மாக் கடையில் வேறு நிலைப்பாடு கொண்டுள்ளது. அரசு ஏன் டாஸ்மாக்கை நடத்த வேண்டியது? அது பணி இல்லையே? ரம்மி, மது இரண்டுமே கொலை செய்பவை. மதுவே ஊழல் போன்ற பல பிரச்சனைக்கும் காரணம் என தெரிவித்தனர்.
அரசு தரப்பில், ” அரசு அதை ஊக்குவிப்பதில்லை” என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “அப்படியென்றால் எதற்காக மது விற்பனை செய்கிறீர்கள்? எல்லாரும் மதுக்கடைகள் மூடப்படும் என சொன்னலும் யாரும் செய்வதில்லை” என தெரிவித்தனர்.
அரசுத் தரப்பில், “மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது. கடைகள் படிப்படியாக மூடப்படும்” என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “அவ்வாறெனில் ஏன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும் அரசு வேலை வாய்ப்பு, பொது நலன் போன்றவற்றிலேயே கவனம் செலுத்தி, நல்லதை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டு, அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.