“முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்துகள் ; அமித்ஷா பேசியது அவரது கருத்து” – எடப்பாடி பழனிசாமி பேட்டி

கோவை : தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநில அரசின் செயல்பாடுகள், கீழடி விவகம் மற்றும் சமீபத்திய அரசியல் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு
“தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனை மறைப்பதற்காகவும், கவனத்தைத் திசைதிருப்பவும், கேலிச்சித்திரங்கள், அவதூறுகள் போன்ற செயல்களை திமுக அரசு வழக்கமாக செய்து வருகிறது,” என்றார்.

கீழடி குறித்து விளக்கம்
கீழடி அகழாய்வுகள் தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கீழடி பற்றி தெளிவாக விளக்கமளித்துள்ளார். புரட்சித்தலைவி ஜெயலலிதா தலைமையில் நாம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியுள்ளார். அவரது மறைவிற்குப் பிறகும், கீழடி ஆராய்ச்சி தொடர்பான தகவல்கள் நம்மால் வெளியிடப்பட்டுள்ளன,” எனக் குறிப்பிட்டார்.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்துகள்
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து அவர், “அவர் அவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை. முருக பக்தர்கள் மாநாடு நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநாட்டிற்கு என் வாழ்த்துக்கள்,” என தெரிவித்தார்.

அமித்ஷா பேசியது அவரது தனிப்பட்ட கருத்து
“ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் நாள் வரும்” என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதுகுறித்து பதிலளித்த பழனிசாமி, “அது அவருடைய தனிப்பட்ட கருத்து. தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதுதான் அவர் கூறிய கருத்தின் நெறி. ஆனால், இப்போது தாய்மொழிக்கு பதிலாக ஆங்கிலத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவது தான் உண்மை,” என்றார்.

யோகா மற்றும் திமுக அரசை விமர்சித்த இபிஎஸ்
மேலும் பேசிய அவர், “திமுக ஆட்சி எதிர்க்கட்சிகளை கேலி செய்யும் வகையில் கார்டூன்கள், அவதூறு தகவல்கள் வெளியிடுகிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. 2026 தேர்தலில் இதற்கான தக்க பதிலை மக்கள் அளிப்பார்கள். யோகா என்பது உடல் ஆரோக்கியத்திற்கே முக்கியமானது. அதனை உலகளவில் மக்களுக்கு கொண்டு செல்லும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்,” என்றார்.

Exit mobile version