சமூக நல்லிணக்கம், போதை ஒழிப்பு மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டுள்ள “சமத்துவ நடைபயணம்” இன்று புதுக்கோட்டை மாவட்ட எல்லையான விராலிமலையை வந்தடைந்தது. திருச்சியில் கடந்த ஜனவரி 2-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த 11-வது வரலாற்றுச் சிறப்புமிக்க நடைபயணத்திற்கு, விராலிமலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட எல்லையான விராலிமலைக்கு வருகை தந்த வைகோவுக்கு, மதிமுக மாவட்டச் செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரம்பரிய முறைப்படி யானை மற்றும் குதிரைகள் அணிவகுக்க, மேளதாளங்கள் முழங்க வைகோ அழைத்து வரப்பட்டார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருக்குச் சால்வை அணிவித்தும், மலர் தூவியும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வைகோ, “தமிழகத்தின் அமைதியைக் குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு இந்த நடைபயணம் ஒரு பாடமாக அமையும்” என்று பேசினார். அவர் தனது உரையில், “இதுவரை நதிகள் இணைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என 10 முறை நடைபயணங்களை நடத்தியுள்ளேன். இந்த 11-வது நடைபயணம், இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கத் துடிக்கும் இந்துத்துவ சக்திகளுக்கு எதிரானது. காந்தியடிகளைக் கொன்றவர்களுக்குச் சிலை வைக்கத் துடிப்பவர்கள், இன்று அரசுத் திட்டங்களில் இருந்து காந்தியின் பெயரையே அகற்றுகிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த மதவாத சக்திகளுக்குத் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
இன்றைய இளைய சமுதாயம் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதைச் சுட்டிக்காட்டி வைகோ உருக்கமாகப் பேசினார். “ஒரு காலத்தில் விவசாயத்திலும், வீரத்திலும் சிறந்து விளங்கிய பஞ்சாப் மாநிலம், இன்று போதைப் பொருட்களால் சீரழிந்துள்ளதைக் காணும்போது வேதனையாக இருக்கிறது. அந்த நிலை என் தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது. போதை அரக்கனிடமிருந்து இளைஞர்களை மீட்க எனது கடைசி மூச்சு வரை போராடுவேன்” என்று அவர் கூறியபோது கூட்டத்தில் பலத்த கைதட்டல் எழுந்தது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநிலங்கள் வியந்து பார்ப்பதாகக் குறிப்பிட்ட வைகோ, “தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் இந்த ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி” என்று தனது உரையை நிறைவு செய்தார்.
இந்தக் கூட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் சண்முகம், சி.பி.ஐ தேசிய குழு உறுப்பினர் செல்வராஜ், மனித நேய மக்கள் கட்சி எம்எல்ஏ அப்துல் சம்பத், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

















