”மீண்டும் மன்னிப்பு கேட்க முடியாது” – கோவா மருத்துவர் விவகாரத்தில் பாஜக அமைச்சர் உறுதி !

பணியிடை நீக்கம் அறிவித்ததாலும், மக்கள் முன்னிலையில் கொந்தளித்ததாலும் சிக்கலில் சிக்கிய பாஜக அமைச்சர் விஸ்வஜித் – மருத்துவரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என உறுதி!

கோவா மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய முதல்வராக ப்ரமோத் சாவந்த் செயற்பட்டு வருகிறார். இந்த நிலையில், கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்விற்குச் சென்ற சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ரானா, அங்கு சேவையாற்றிய மருத்துவா் ருத்ரேஷ் குட்டிகரை மக்கள் முன்னிலையில் கடுமையாக திட்டியதுடன், அவரை பணியிடை நீக்கம் செய்வதாகவும் அறிவித்தார்.

வெளியான வீடியோவில், எந்தவித விசாரணையும் இல்லாமல் ஒரு மருத்துவரை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்ட அமைச்சரின் செயல்கள் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து, கோவா மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. இந்திய மருத்துவர்கள் சங்கம் (IMA) மற்றும் கோவா மருத்துவர்கள் கூட்டமைப்பும் அமைச்சரின் நடவடிக்கையை கண்டித்து உறுதியான கருத்துகள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் முதல்வர் ப்ரமோத் சாவந்த் தலையிட்டு, அமைச்சர் விஸ்வஜித்-உடன் கலந்துரையாடிய பின், மருத்துவர் ருத்ரேஷ் பணியிடை நீக்கம் செய்யப்படமாட்டார் என்று அறிவித்தார். அதேசமயம், அமைச்சர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய அளவிலான போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்படும் என எச்சரிக்கையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் விஸ்வஜித் ரானா, “மருத்துவர் ருத்ரேஷிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு தவறான வார்த்தைகள் பயன்படுத்தியதை வருத்தப்படுகிறேன். என் நோக்கம் மருத்துவரை அவமதிப்பது அல்ல” என்று விளக்கமளித்தார்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த மருத்துவர் ருத்ரேஷ், “அவமானப்படுத்திய அதே இடத்திலேயே நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர், “மீண்டும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டேன். இனிமேல் இந்த பிரச்னையை தீர்க்க நாம் இருவரும் சமரசமாக ஒரு குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும்” எனக் கூறினார். மேலும், “ஒரு கப் தேநீர் அருந்தி பிரச்னையை முடிக்கலாம்” என்றும் அமைதிப்பூர்வமாக முடிவுக்கு அழைத்தார்.

Exit mobile version