சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு விளைநிலங்கள் பயன்பெறும்!

தருமபுரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2025–26 (பசலி 1435) ஆம் ஆண்டிற்கான பாசனப் பணிகளுக்காகத் தண்ணீர் திறக்கும் நிகழ்வு நேற்று எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், நீர்வளத் துறை அரசாணைப்படி நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் கலந்துகொண்டு, மதகுகளை உயர்த்தித் தண்ணீரைத் திறந்து வைத்தனர். மலர் தூவித் தண்ணீரை வரவேற்ற விவசாயிகள், இந்த அறிவிப்பினால் தங்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்தத் தண்ணீர் திறப்புத் திட்டத்தின்படி, பழைய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள முக்கிய ஐந்து ஏரிகள் முதலில் நிரப்பப்படும். அதனைத் தொடர்ந்து புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கும் சீரான முறையில் நீர் விநியோகம் செய்யப்படும். ஜனவரி 5-ம் தேதி தொடங்கிய இந்த நீர் விநியோகம், எதிர்வரும் மே 24-ம் தேதி வரை மொத்தம் 140 நாட்களுக்குத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 473.09 மில்லியன் கனஅடி (MCFT) தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட உள்ளது. இதன் மூலம் பழைய ஆயக்கட்டுப் பரப்பான 2,626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டுப் பரப்பான 1,874 ஏக்கர் என மொத்தம் 4,500 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடிப் பாசன வசதியைப் பெற உள்ளன.

இப்பாசனத் திட்டத்தினால் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, சாமனூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள் பெரும் பலனடைவார்கள். நிகழ்ச்சியின் போது பேசிய கலெக்டர் ரெ.சதீஸ், நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் நீர் வரத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் தண்ணீரை வீணாக்காமல் மிகச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மூலம் அதிக விளைச்சல் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் கணேஷ், மாரண்டஅள்ளி பேரூராட்சித் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், தற்போதைய மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நீர்வளத் துறை அலுவலர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி விவசாயிகள் சாகுபடிப் பணிகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.

Exit mobile version