பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வடகாடு ஊராட்சியின் முக்கிய நீர் ஆதாரமான பரப்பலாறு அணையிலிருந்து, விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அணையின் மதகுகளைத் திறந்து வைத்து, சீறிப்பாயும் நீரினை மலர் தூவி வரவேற்றார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 1974-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை, அப்பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், விவசாயப் பணிகளுக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணையைத் திறந்து வைத்துப் பேசிய அமைச்சர் அர.சக்கரபாணி, தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தற்போது வினாடிக்கு 35 கன அடி வீதம் அடுத்த 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெருமாள்குளம், முத்துபூபாலசமுத்திர கண்மாய், சடையன்குளம், செங்குளம், இராமசமுத்திரம் கண்மாய் மற்றும் ஜவ்வாதுப்பட்டி பெரியகுளம் ஆகிய 6 முக்கிய கண்மாய்கள் முழுமையாக நிரம்பும். இதன் நேரடி மற்றும் மறைமுகப் பாசன வசதி மூலம் சுமார் 1323 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், கடந்த பல ஆண்டுகளாகப் படிந்துள்ள வண்டல் மண்ணால் அணையின் கொள்ளளவு குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அதனைத் தூர்வார முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

அணை தூர்வாரும் பணிகள் இன்னும் சில தினங்களில் முறைப்படி தொடங்கப்பட உள்ளன. தூர்வாரப்படும் போது கிடைக்கும் சத்துக்கள் நிறைந்த வண்டல் மண்ணை, வடகாடு பகுதி விவசாயிகளின் நிலங்களுக்கு மேம்பாட்டிற்காக வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் சஞ்சய் காந்தி, ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், எஸ்.ஆர்.கே. பாலு, ஒன்றிய துணைச் செயலாளர்கள் முருகானந்தம், சிவக்குமார் மற்றும் மாவட்டப் பிரதிநிதிகள் சண்முகம், பாண்டி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் தனஜெயன், உதவி பொறியாளர் நிவாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Exit mobile version