வெற்று விளம்பரங்களுக்கு வீண் செலவு : தி.மு.க. மீது அண்ணாமலை சாடல்

சென்னை : தி.மு.க. ஆட்சியில் வெற்று விளம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்கப்படுகிறது என்றும், உண்மையில் மக்களின் அடிப்படை தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும், தமிழக முன்னாள் பா.ஜ. தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு மே மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதன் காரணமாக பலரும் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தில் சிக்கியுள்ளனர்” என கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “கல்வித்துறையை கேலிக்கூத்தாக்கும் வகையில் தி.மு.க. அரசு செயல்படுகிறது. வெற்று விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கிறது. இன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் சென்றுவிட்டது. ஆனால், அடுத்த தலைமுறையை உருவாக்கும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து நிதி எங்கே செல்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்றார்.

“உடனடியாக மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும், மீண்டும் இதுபோன்ற நிலை ஏற்பட்டால், கல்வித்துறையின் நலனுக்கு அது பேரழிவாக அமையும். எனவே, தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version