டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திலிருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான கோலி, இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடலாம் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் இந்த முடிவை அறிவித்தது கோலியின் தீவிர ரசிகர்களையும் , முன்னாள் வீரர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
123 டெஸ்ட்கள் – 9,230 ரன்கள்!
விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 46.85 என்ற சராசரியுடன் 9,230 ரன்கள் குவித்துள்ள அவர், 30 சதங்கள் மற்றும் 7 இரட்டைச் சதங்களையும் பதிவு செய்துள்ளார். அவரது உயர்ந்த தனிப்பட்ட ஸ்கோர் 254 ஆகும்.
2024 T20 உலகக் கோப்பையை வென்ற பின்னர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர். தற்போது, இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த நிலையில், இந்திய ரசிகர்களிடம் மிகுந்த கவலையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“4-5 சதம் அடிக்க திட்டம்!” – பயிற்சியாளர் உருக்கம்
இந்த நிலையில், டெல்லி ரண்ஜி அணியின் பயிற்சியாளரான சரந்தீப் சிங், பிடிஐக்கு அளித்த பேட்டியில், “சில வாரங்களுக்கு முன் கோலியிடம் பேசினேன். இங்கிலாந்து தொடருக்கு தயாராக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், ‘இல்லை, இந்தியா ஏ அணிக்காக விளையாடப்போகிறேன். 2018-ல் செய்ததைப் போலவே இங்கிலாந்து தொடரில் 4 அல்லது 5 சதங்களை அடிக்க விரும்புகிறேன்’ என்று உற்சாகமாக பதிலளித்தார்,” எனத் தெரிவித்தார்.
அதிர்ச்சி முடிவு
“அதனால், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவரை கண்டிருப்போம் என நம்பினோம். ஆனால், தற்போது அவர் ஓய்வை அறிவித்துள்ள நிலைமை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மிக கடினமானது. கோலியின்றி அங்கு இந்திய அணி எவ்வாறு நிறைவு செய்யப் போகிறது என்பது பெரிய கேள்வி” என்றும் அவர் சோகத்துடன் கூறினார்.