போர் பதற்றம் காரணமாக சென்னையிலிருந்து செல்லக்கூடிய 11 விமான சேவைகள் ரத்து!


இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிலவரம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு சென்னையிலிருந்து இயக்கப்பட உள்ள 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த 13ஆம் தேதி இஸ்ரேல் விமானப்படை ஈரானின் தளங்களை தாக்கியது. இதற்குப் பதிலளிக்க ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது. பின்னர், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கி, ஈரானின் அணு சக்தி மையங்களை தாக்கியது. இதன் விளைவாக, ஈரானும் அமெரிக்க படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.

இந்த போர் சூழ்நிலையில், மத்திய கிழக்கு நாடுகள் வான்வழி தடங்களை மூடியுள்ளன. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்காசிய நாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.

ஏர் இந்தியா நிறுவனம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. துபாய் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளதனால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வளைகுடா நாடுகளுக்கான அனைத்து புறப்பாடுகளையும் ரத்து செய்துள்ளது.

இதன் காரணமாக, சென்னையிலிருந்து தோஹா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருந்த 6 புறப்பாடு விமானங்கள் மற்றும் வருகை தர இருந்த 5 விமானங்கள் என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், தாய்லாந்திலிருந்து தோஹா செல்ல இருந்த 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், பயண பாதையில் ஏற்பட்ட பாதுகாப்பு சிக்கல்களால், தோஹாவிற்கு செல்ல முடியாமல் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.

Exit mobile version