திருநெல்வேலி : பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் கவின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கும் நிலையில், அதில் பெயர் சொல்லப்பட்ட இளம்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு தனது நிலைமையை விளக்கியுள்ளார்.
“கவினுக்கும் எனக்கும் என்ன உறவென்று யாருக்கும் தெரியாது. என் அப்பா, அம்மா இந்த விஷயத்துல எந்த தொடர்பும் இல்ல. நாங்களும் கஷ்டமா இருக்கோம்” எனக் கூறி பேசும் அந்த இளம்பெண் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
என்ன நடந்தது ?
கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலியின் கேடிசி நகர் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே, குடும்பத்துடன் வந்திருந்த கவின் மீது, சுர்ஜித் என்ற இளைஞர் திடீரென வாளி கொண்டு தாக்கி கொலை செய்தார்.
சுர்ஜித்தின் அக்காவுடன் கவின் பழகியதாக கூறப்பட்டு, அதில் ஏற்பட்ட கோபத்தின் தாக்கமாகவே இந்த கொலை நடைபெற்றதாகவும், இது ஒரு ஆணவக் கொலை எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சுர்ஜித்தின் பெற்றோர் சஸ்பெண்ட்!
சுர்ஜித்தின் தந்தை சரவணனும், தாய் கிருஷ்ணகுமாரியும் இருவரும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட, அவர்கள் இருவரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
“சாதி வெறியோட நடந்த கொலை இது. சுர்ஜித் மட்டும் இல்லை, அவன் பெற்றோர்களும் கைதுசெய்யப்படணும்” எனக் கவினின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, கவினின் உடலை மருத்துவமனையிலிருந்து பெற மறுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் சமூக நீதிக்கான கேள்விகளை மீண்டும் எழுப்பி இருக்கிறது. காவல்துறை, குடும்பப்பிணைகள், சாதி அடிப்படையிலான கொலைகள் போன்றவை மீண்டும் மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

















