தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள அருள்மிகு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி – கால பைரவர் சித்தர் பீடத்தில், உலக நன்மைக்காகவும் பக்தர்களின் நல்வாழ்விற்காகவும் சனிப்பெயர்ச்சி பெருவிழா சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ஆன்மீக மையத்தில் தனிச்சிறப்பாக அமைந்துள்ள 9 அடி உயர மங்களம் தரும் சனீஸ்வர பகவான், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்தார். கடந்த மார்ச் 5-ம் தேதி காலை மஹா கணபதி ஹோமத்துடன் விழா முறைப்படி தொடங்கியது. அன்று மாலை 6 மணிக்கு சங்கல்பமும், இரவு 7 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு விசேஷ யாக வேள்விகளும் ஸ்ரீசித்தர் முன்னிலையில் பக்தி பரவசத்துடன் அரங்கேறின.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று அதிகாலை 5 மணி முதலே சித்தர் பீடம் களைகட்டியது. சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மஹா யாகம் தொடங்கப்பட்டு, காலை 6 மணிக்கு சனீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், திருநீறு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்ளிட்ட 64 வகையான மூலிகை திரவியங்களால் மஹா அபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சரியாக காலை 7.37 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்த மங்கள நேரத்தில், மூலவருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
பன்னிரண்டு ராசிகளுக்கும் உரிய பரிகார ஹோமங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்ற இந்த விழாவில், தூத்துக்குடி மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “சனீஸ்வராய நமஹ” என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சற்குரு சீனிவாச சித்தர் மற்றும் வழிபாட்டுக்குழுவினர் ஒருங்கிணைப்பில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி மற்றும் கண்டச்சனி ஆகியவற்றின் பிடியில் இருக்கும் ராசிக்காரர்கள் அதிகளவில் பங்கேற்றதால் சித்தர் பீட வளாகமே ஆன்மீக கடலில் மூழ்கியது போல் காட்சியளித்தது.












