உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தமிழக அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை, தற்போது டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தீர்ப்பு உள்ள நிலையில், தி.மு.க. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முறையற்ற செயல்பாடுகளால்தான் இந்தப் பிரச்சினை உருவெடுத்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அரசு இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளதாகவும் அவர் கடுமையாகச் சாடினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்காத சூழலில், இதனை எதிர்த்துப் பூர்ணசந்திரன் என்ற பக்தர் தீக்குளித்து உயிர்நீத்த நிகழ்வு மிகுந்த வேதனையளிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தி.மு.க. அரசுக்கான ஒரு எச்சரிக்கை என்றும், பக்தர்கள் உரிய முறையில் மலைக்குச் சென்று தீபம் ஏற்றத் தேவையான அனைத்துப் பாதுகாப்பையும், வசதிகளையும் அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், முதல்வர் ஸ்டாலின் திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு, உயிரிழந்த பக்தர் பூர்ணசந்திரன் வீட்டிற்குச் சென்று நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் தி.மு.க-விற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் முருகன் கோவில் இடிக்கப்படுவதைத் தட்டிக்கேட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை போலீசார் தாக்கியதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த எல்.முருகன், வடமாநிலங்களில் பா.ஜ.க. அரசு அயோத்தி உள்ளிட்ட இடங்களில் சர்வதேசத் தரத்தில் கோவில்களைக் கட்டி வருவதைச் சுட்டிக்காட்டினார். அத்தகைய மேம்பட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அரசியல் கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், அதற்கான நேரம் வரும்போது தேசியத் தலைவர்கள் அறிவிப்பார்கள் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க. ஏற்கனவே இருப்பதை உறுதி செய்ததோடு, அவர்களது இருப்பு கூட்டணிக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version