அரசுப் போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நிர்வாகப் பிரிவுகளில் மாற்றுப்பணிக்கு (Alternative Duty) அமர்த்தி, அவர்களைப் பேருந்துகளை இயக்க விடாமல் தடுக்கும் நடைமுறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. ஆளும் கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் ‘மாற்றுப்பணி’ என்ற பெயரில் தங்களது அசல் பணியைச் செய்யாமல், சொகுசாக அலுவலகப் பணிகளில் அமர்ந்து கொண்டு வேலை செய்யாமலேயே சம்பளம் பெறும் விவகாரத்தில் நீதிமன்றம் இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கனகசுந்தர் கடந்த 2019-ல் தாக்கல் செய்த மனுவில், மதுரை மண்டலத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நிர்வாகப் பிரிவில் பணியாற்றுவதால் பேருந்து இயக்கம் பாதிக்கப்படுவதாகவும், இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிப்பதன் மூலம் அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில், மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை ஆஜராகி, “ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை; தற்போதும் 264-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நிர்வாகப் பணியில் உள்ளனர்” எனத் தரவுகளை முன்வைத்தார்.
போக்குவரத்துக் கழகம் தரப்பில், “நிர்வாகப் பிரிவில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் தற்காலிகமாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பக் கூடாது என ஏற்கனவே அரசாணை உள்ள நிலையில், அதனை மீறுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினர். மேலும், பணியின் போது உடல் ஊனமுற்றால் அல்லது மருத்துவ ரீதியாகப் பணி செய்யத் தகுதியற்றவர் எனச் சான்றிதழ் பெற்றால் மட்டுமே அவர்களை மாற்றுப்பணிக்கு அனுப்ப வேண்டும்; மற்றபடி எந்தக் காரணத்திற்காகவும் அவர்களை நிர்வாகப் பணிகளில் அமர்த்தக் கூடாது எனத் தெள்ளத்தெளிவாக உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பு, போக்குவரத்து கழகங்களில் நிலவும் ‘நிழல்’ பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















