ஐபிஎல் 2025 தொடரில் எதிர்பாராத திருப்பங்களை உருவாக்கிய இரு அணிகள் — மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ். தொடக்கத்தில் எளிதில் இறுதிப்போட்டிக்கு செல்லும் என நினைக்கப்பட்ட டெல்லி அணி கடைசி கட்டத்தில் சரிந்தது. அதே சமயம், முதல் 5 போட்டிகளில் வெறும் ஒரு வெற்றியுடன் இருந்த மும்பை, அம்பி மோடிலிருந்து அந்நியனாக மாறி அசத்தல் ஆட்டத்துடன் பிளேஆஃப்பில் நுழைந்தது.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டிக்கு முன்னதாகவே டெல்லி அணியில் அதிர்ச்சி. கேப்டனாக விளங்கிய அக்ஸர் படேல் உடல்நலக் கோளாறு காரணமாக விலக, டூப்ளசிஸ் புதிய கேப்டனாக களமிறங்கினார். டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த டெல்லி, தொடக்கத்தில் மும்பையை கிழித்தது.
ரோகித் 5 ரன்களில் வெளியேற, வில் ஜாக்ஸ் 21, ரிக்கெல்டன் 25 என முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஆனால், அதன்பின் சூர்யகுமார் யாதவ் – திலக் வர்மா ஜோடி நிதானமாக கட்டுப்பாட்டுடன் அணியை நடத்தினார்கள்.
கடைசி ஓவர்கள் – ஸ்கோர் ட்விஸ்ட்
17 ஓவர்களுக்கு பின் வெறும் 126 ரன்கள் எடுத்திருந்த மும்பை, கடைசி இரண்டு ஓவர்களில் 54 ரன்கள் குவித்து ஆட்டத்தின் திருப்பத்தை உருவாக்கியது. முகேஷ் குமார் வீசிய 19வது ஓவரில் நமன் தீர் பட்டாசு போட்டார் – 2 சிக்ஸர், 2 பவுண்டரி. கடைசி ஓவரில் சூர்ய குமார் அதே மாஸ்: மீண்டும் 2 சிக்ஸர், 2 பவுண்டரி !
மூன்று விக்கெட் இழப்பிற்கு 43 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த சூர்ய, நமன் தீர் (8 பந்துகளில் 24) இணைந்து மும்பையை 180 ரன்களுக்கு கொண்டு சென்றனர்.
விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்த டெல்லி, ஒருபோதும் செட்டாகவே இல்லை. கேப்டன் டூப்ளசிஸ் 6, ராகுல் 11, அபிஷேக் போரல் 6, நிகாம் 20, ஸ்டப்ஸ் 2, ரிஸ்வி 39 என அனைவரும் முறையே தோல்வியடைந்தனர்.
பும்ரா (3.2 ஓவர் – 12 ரன் – 3 விக்கெட்) மற்றும் சாண்ட்னர் (4 ஓவர் – 11 ரன் – 3 விக்கெட்) இணைந்து டெல்லியின் நம்பிக்கையை நொறுக்கினார்கள்.
கெத்தா கம்பேக் – பிளேஆஃப்பில் மும்பை
59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை, 4வது அணியாக பிளேஆஃப்பில் நுழைந்தது. சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வானார். ஏற்கனவே பஞ்சாப், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் முன்னதாகவே தகுதி பெற்ற நிலையில், ‘ஐதாண்டா மும்பை’ என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
6வது கோப்பை வருமா ?
5 கோப்பைகள் கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ், இப்போதைய வெற்றியின் தாக்கத்தில் 6 வது கோப்பிக்காக போராட தயாராகி விட்டது!