உத்தரகண்ட் மாநிலத்தின் மாநில மலராகவும், இமயமலைப் பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் காணப்படும் அதிசய மலராகவும் உள்ளது பிரம்ம கமலம். பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் இந்த மலர்கள், இளவேனில் காலத்தில் மாலை 7 மணிக்கு மேல் இரவுநேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். இந்தப் பூ மலரத் தொடங்கிய நேரத்தில் இருந்து 2 மணி நேரத்துக்குப் பிறகே முழுமையாக மலர்ந்திருக்கும். அதேபோல, அதிகாலைக்குள்
உதிர்ந்துவிடும் என்றாலும், இந்தப் பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் வீசும். இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையைச் சேர்ந்தது என கூறப்படுகிறது.
உலக வெப்பநிலை மாறுபாட்டால் அழிந்துவரும் இந்த தாவரத்தை காப்பாற்ற உத்தரகண்ட் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்த மலர் மலரும்போது அருகிலிருந்து நாம் நினைத்து வேண்டியது வரமாக கிடைக்கும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.
இத்தகைய அபூர்வ பிரம்ம கமலம் தாவரம், சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிக் பள்ளியில் வளர்க்கப்பட்டு வந்தநிலையில், நேற்று இரவு அதில் 2 பூ பூத்தது.
நிர்வாக அலுவலர் தங்கவேலால் நடப்பட்ட இந்தச் செடியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2 மொட்டுக்கள் வந்துள்ளன.
11 மணிக்கு மேல் அந்த மொட்டு மலர்ந்து வெண்ணிலவைப் போல காட்சியளித்தது.
இதுகுறித்து தகவலறிந்த அப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் நள்ளிரவில் வந்து பிரம்ம கமலம் மலரை பார்த்து வணங்கினர். பொதுமக்கள் சிலர் பிரம்ம கமலம் மலரை கைப்பேசியில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதுடன், சுயப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். இதையடுத்து, நள்ளிரவு 2 மணியளவில் பிரம்ம கமலம் மலரின் இதழ்கள் சிறிது சிறிதாக சுருங்கி பின்னர் உதிர்ந்தது.

















