கோபியில் சோகம்: எடப்பாடி பழனிசாமியின் உறவினர் காலமானார் – நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலாளர்!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியின் நெருங்கிய உறவினரும், ஈரோடு மாவட்ட அதிமுகவின் முக்கியப் புள்ளியுமான திருமுருகேசசாமி (79) அவர்கள், வயது மூப்பின் காரணமாகக் கடந்த மாதம் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலமானார். கோபிசெட்டிபாளையம் கபிலர் வீதி வாஸ்து நகரைச் சேர்ந்த மறைந்த அம்மாவாசை கவுண்டரின் மகனான இவர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளரும், சசி நிவாஸ் மற்றும் பழமுதிர்சோலை பேங்கர்ஸ் உரிமையாளருமான ஏ.டி. சசிபிரபுவின் தந்தை ஆவார். அன்னாரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாகக் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சசிபிரபுவின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்தார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த திருமுருகேசசாமியின் திருவுருவப் படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, தனது உறவினரும் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சசிபிரபு மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்துத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். இந்தத் துயர நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான கே.சி. கருப்பணன், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.வும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளருமான ஏ.கே. செல்வராஜ், திருப்பூர் முன்னாள் எம்பி சி. சிவசாமி, பவானிசாகர் எம்.எல்.ஏ. ஏ. பண்ணாரி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். ரமணிதரன், இ.எம்.ஆர். ராஜா (எ) ராஜா கிருஷ்ணன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கோபி காளிதாஸ், மாநிலப் பேரவை இணைச் செயலாளர் கே.பி.எஸ். ராஜா மற்றும் ஹரிணி குரூப் உரிமையாளர் பி. சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் குள்ளம்பாளையம் கே.கே. செல்வம், சிறுவலூர் மாரப்பன், கோபி ஒன்றிய செயலாளர் ஆப்பிள் தன்னாசி, வி.கே.சி. சிவகுமார், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ரேவதி தேவி, வழக்கறிஞர் தனகோடி ராம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி.என். சுப்பிரமணி, கே.ஆர். ஜான் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருந்த வந்த அதிமுக நிர்வாகிகள், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் உறவினர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அன்னாரது மறைவிற்குப் புகழஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version