திருவாரூர் ஆழித்தேரோட்டம் 2026: மார்ச் 29-ல் சரித்திர நிகழ்வு – மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிரடி முன்னேற்பாடுகள்!

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டத் திருவிழா வரும் மார்ச் 29-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மிகத் தீவிரமாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் முன்னிலை வகித்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை கொண்ட ஆழித்தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், ஐந்து தேர்களுக்கும் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், தேருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்புப் படையினர் அணிவகுப்பதோடு நான்கு வீதிகள் மற்றும் கமலாலயம் குளக்கரை பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்குத் தடையின்றி குடிநீர் வழங்கவும், தேரோட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்னும் பின்னும் கூடுதலாக ஒரு மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், நான்கு வீதிகளிலும் நடமாடும் கழிவறை வசதிகள் மற்றும் கூடுதல் சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்சார வாரியம் சார்பில் தேரோட்டப் பாதையில் உள்ள மின்கம்பங்களைச் சீரமைக்கவும், மின் கம்பிகளை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, விழா காலங்களில் நகர் முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் தேரோடும் வீதிகளில் உள்ள மரக்கிளைகளை அகற்றி சாலைத் தகுதிச் சான்றிதழை வழங்க வேண்டும் என்றும், மருத்துவத்துறை சார்பில் அவசர கால சிகிச்சைக்கு மாவட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர் பா. கலைவாணி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து இந்த ஆன்மீகப் பெருவிழாவைச் சிறப்பாக நடத்திட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

Exit mobile version