தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டை விட்டு சென்ற மகன், தாயை மீண்டும் சந்தித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியைக் ஏற்படுத்தியது.
இக்கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் – ருக்குமணி தம்பதியினருக்கு குமார், செந்தில், முருகன் என மூன்று மகன்கள் உள்ளனர். 1985ம் ஆண்டு குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்த அவர்கள், அங்கு வேலை செய்து வந்தனர். அந்த நேரத்தில், வேலைக்கு செல்ல பெற்றோர் வலியுறுத்தியதால் மனமுடைந்த மூத்த மகன் குமார் வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகள் குடும்பத்தினர் குமாரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மகன் காணாமல் போன வலியில் நடராஜ் உயிரிழந்தார். பின்னர் ருக்குமணி, தனது இரண்டாவது மகன் செந்திலுடன் ஊருக்கு திரும்பினார். இளைய மகன் முருகன் சென்னையிலேயே வேலை பார்த்தார்.
குமார் தமிழகம் முழுவதும் கூலி வேலைகளை செய்து வாழ்க்கையைச் செலவழித்துள்ளார். ஊருக்குத் திரும்ப வேண்டாம் என்ற எண்ணத்தில் பல ஆண்டுகள் சென்ற குமார், சமீபத்தில் தேனி மாவட்டம் வேலப்பர் கோயிலுக்குச் செல்லும் போது, வழியில் தனது சொந்த ஊர் கதிர்நரசிங்கபுரம் என்னும் பெயரைப் பார்த்ததும் நெகிழ்ந்தார்.
உடனே அவர் அங்கு இறங்கி, ஊர் மக்களிடம் தனது குடும்பம் பற்றிய தகவல்களை கேட்டறிந்தார். பின்னர் தாய் ருக்குமணி வசிக்கும் வீட்டிற்கு சென்ற குமார், 40 ஆண்டுகளுக்குப் பிறகு தாயை பார்த்ததும் கண்ணீருடன் கட்டித் தழுவினார். தாயும் மகனை பார்த்து கண் கலங்கினார். சுமார் 90 வயதான பாட்டி மற்றும் சகோதரர்களையும் சந்தித்த குமார், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நெகிழ்ச்சிகரமான நிகழ்வு, கதிர்நரசிங்கபுரம் கிராம மக்களின் மனதைக் கனிவாக்கி விட்டது.