வைகுண்டம் முதல் பாபநாசம் வரை உயிரோட்டமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றின் தற்போதைய அவலநிலை குறித்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையால் நியமிக்கப்பட்ட ஆணையரும், புகழ்பெற்ற நீர் பாதுகாப்பு நிபுணருமான ராஜேந்திர சிங் நேரடி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முடிவில், முறையற்ற நவீன வளர்ச்சியால் தாமிரபரணி ஆறு அழிவை நோக்கிச் செல்வதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காமராசு, தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கவும், கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், ஆற்றின் உண்மைத் தன்மையைக் கண்டறிய ராஜஸ்தானைச் சேர்ந்த ‘இந்தியாவின் நீர் மனிதர்’ (Waterman of India) என்று அழைக்கப்படும் மெக்சேசே விருது பெற்ற ராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்தது. இதன்படி, கடந்த இரண்டு நாட்களாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அவர் தீவிர கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மேலாத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வர பாஞ்சான் மற்றும் போ பாஞ்சான் மடைகள் வழியாக நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் சாக்கடைக் கழிவுகள் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக ஆற்றுக்குள் கலப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள நீரின் மாதிரிகளைச் சோதனைக்காக அதிகாரிகள் முன்னிலையில் சேகரித்துக் கொண்டார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர சிங், “தாமிரபரணி ஆற்றின் நெடுகிலும் சுமார் 25 முக்கிய இடங்களை இதுவரை ஆய்வு செய்துள்ளோம். அந்தந்தப் பகுதியின் புவியியல் அமைப்பு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஆற்றின் தூய்மையை மீட்டெடுக்கத் தனித்தனியான பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரைச் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரித்தோ அல்லது தனியான ஓடைகள் மூலமாகவோ ஆற்றில் கலப்பதைத் தடுக்க முடியும்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இயற்கை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த தாமிரபரணி, பாபநாசத்தில் தொடங்கி கடலில் கலக்கும் வரை தடையின்றி ஓட வேண்டும். ஆனால், ‘வளர்ச்சி’ என்ற பெயரில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பம்பிங் ஸ்டேஷன்கள் மற்றும் தடுப்பணைகள் இயற்கையோடு ஒத்திசைவாகக் கட்டப்படவில்லை. இந்தத் தவறான திட்டமிடல்களால் இன்று தாமிரபரணி ஆறு தன் அடையாளத்தை இழந்து அழிவு நிலைக்குச் சென்றுள்ளது,” என எச்சரித்தார்.
இந்த ஆய்வின் போது மனுதாரர் காமராசு, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். ராஜேந்திர சிங் அளிக்கப்போகும் அறிக்கை, தாமிரபரணி ஆற்றின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படுகிறது.

















