நீலகிரி மாவட்டத்தின் தொன்மையான கலாச்சாரம் மற்றும் மறைந்து வரும் பழங்குடியினரின் பாரம்பரிய உணவு முறைகளை வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு உன்னத முயற்சியாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய பிரத்யேக ‘காபி டேபிள்’ புத்தக வெளியீட்டு விழா கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை தாங்கி, இந்த அரிய வரலாற்று ஆவணத்தை வெளியிட்டு, பழங்குடியின மக்களிடமே நேரடியாக வழங்கினார். நவீன உணவுக் கலாச்சாரத்திற்கு மத்தியில், மண்ணின் மணமும் மருத்துவ குணமும் மாறாத பழங்குடி உணவுகளைப் பாதுகாப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, “மலை மாவட்டமான நீலகிரியில் கோத்தர், குறும்பர், இருளர், தோடர், பணியர், காட்டுநாயக்கர், ஆலுகுறும்பர் மற்றும் பெட்டகுறும்பர் என 8 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை உலகிற்கே ஒரு பாடம். குறிப்பாக, இவர்கள் பயன்படுத்தும் சிறுதானியங்கள், காடுகளில் கிடைக்கும் கிழங்குகள், கீரைகள் மற்றும் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வலுசேர்ப்பவை. நீலகிரியின் இயற்கைச் சூழலில் வளரும் கீரைகளின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த மக்களுக்கு இருக்கும் அபாரமான அறிவு வியக்கத்தக்கது. எவ்வித கூடுதல் செலவுமின்றி தங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அவர்கள் தயாரிக்கும் சத்தான உணவு முறைகளை ஆவணப்படுத்துவது காலத்தின் கட்டாயம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஆட்சியர், இந்தப் புத்தகத்தைத் தயாரிப்பதில் உயர்தரப் புகைப்படங்களை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய ‘லைட் அண்டு லைப் அகாடமி’ (Light and Life Academy) நிறுவனத்திற்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இதன் மூலம் பழங்குடியின இளைஞர்களிடையே தங்கள் பாரம்பரியத்தின் மீது பெருமிதம் ஏற்படுவதோடு, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி மற்றும் நெகிழ்ச்சியான முயற்சியைப் பாராட்டிய பழங்குடியின மக்கள், தங்கள் வாழ்வியலை அங்கீகரித்த ஆட்சியருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடலூர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன், தனி வட்டாட்சியர் (ச.பா.தி.) கிருஷ்ணமூர்த்தி, கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், ‘லைட் அண்டு லைப் அகாடமி’ சார்பில் அனுராதா, இக்பால் மற்றும் ஏராளமான பழங்குடியின மக்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். நீலகிரி மாவட்டத்தின் இந்த முன்னெடுப்பு, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் உள்ள பழங்குடி இனங்களின் கலாச்சாரத்தைப் பாதுகாக்க ஒரு முன்னோடியாக அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.















