கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரின் முக்கியப் பகுதியாக விளங்கும் வனபத்ரகாளியம்மன் சாலையில் அமைந்துள்ள காட்டூர் ரயில்வே கேட், நேற்று நீண்ட நேரம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான உலகப் புகழ்பெற்ற மலை ரயில் பாதை இந்த நகரின் மையப்பகுதி வழியாகச் செல்கிறது. தினசரி காலை 7:10 மணிக்கு மலை ரயில் செல்லும் போது இந்த கேட் அடைக்கப்பட்டு, ரயில் கடந்த பின் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று, ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையிலும், தொழில்நுட்பக் காரணங்களால் கேட் நீண்ட நேரம் அடைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று காலை மலை ரயில் ரத்து செய்யப்பட்டதால், கல்லாறில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி என்ஜின் மட்டும் வந்து கொண்டிருந்தது. குஞ்சப்பனை மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேடான பகுதியில் ரயில் வரும்போது, காலை நேரத்தில் பெய்த தூறல் மழையினால் தண்டவாளத்தில் வழுக்கும் தன்மை ஏற்பட்டது. இதனால் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்திலேயே சுழன்றபடி முன்னேறிச் செல்ல முடியாமல் நின்றது. இதன் காரணமாக, காட்டூர் ரயில்வே கேட் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகத் திறக்கப்படாமல் இருந்ததால், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வேலைக்குச் செல்வோர் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில், பொறுமையிழந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், “ரயில் நிலையத்திலிருந்து சிக்னல் கிடைத்தவுடன் உடனடியாக கேட்டை மூடாமல், ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மட்டும் கேட்டை மூட வேண்டும்” எனத் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், “கல்லாறிலிருந்து ரயில் வர 20 நிமிடங்கள் ஆகும். நேற்று மழையினால் தண்டவாளம் வழுக்கியதால் ரயில் நின்றது. தண்டவாளத்தில் மணல் தூவி, ரயிலை இயக்கி ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்த பின்னரே கேட்டைத் திறக்க முடிந்தது. ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளின் படியே கேட்டுகள் இயக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தனர்.
தற்போது அந்தப் பகுதியில் நிலைமை சீராகிப் போக்குவரத்து பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது. எனினும், அடிக்கடி நிகழும் இது போன்ற காலதாமதங்களைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

















