ஈரோடு மாநகரில் உள்ள புகழ்மிக்க ஈ.கே.எம்.அப்துல் கனி மதரசா இஸ்லாமியர் பள்ளியில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2004–2005 கல்வியாண்டில் பயின்று வெளியேறிய முன்னாள் மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி (Alumni Meet) பள்ளி வளாகத்தில் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கமாக, இப்பள்ளியில் பணியாற்றி மறைந்த ஆசிரியர்கள் மற்றும் அகால மரணமடைந்த முன்னாள் மாணவர்களின் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தாங்கள் பயின்ற வகுப்பறைகளையும், மைதானத்தையும் சுற்றிப் பார்த்த மாணவர்கள், தங்கள் ஆசிரியர்களுடன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு நெகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பள்ளியின் தாளாளர் அல்ஹாஜ் ஜி. முகமது தாஜ் முஹ்யித்தீன் அவர்கள், இந்தப் பள்ளியில் பயின்ற ஒவ்வொருவரும் தங்களுக்கு எப்போதுமே பிள்ளைகள் போன்றவர்கள் என்றும், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அதே பாசத்துடனும் மரியாதையுடனும் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவது தங்களுக்குக் மட்டற்ற மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஒரு முக்கிய வேண்டுகோளாக, முன்னாள் மாணவர்கள் தங்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, தற்போது இப்பள்ளியில் பயின்று வரும் ஏழை மாணவ-மாணவிகளில் ஒருவரையாவது தத்தெடுத்து, அவர்களின் மேல்நிலைக் கல்வி அல்லது கல்லூரிப் படிப்பு வரையிலான செலவுகளை ஏற்று கல்வி உதவி வழங்கினால் அது சமுதாயத்திற்குச் செய்யும் மிகப்பெரிய தொண்டாக அமையும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தங்களுக்குக் கல்வி போதித்து ஆளாக்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவில் ஈ.கே.எம். தாஜ் முகமது கலீல் ஹாஜி, முனைவர் ஏ.முகமது உதுமான், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.மூசா ராஜா, மதரசா இஸ்லாமிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜுனைதி உள்ளிட்ட கல்வி நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நண்பர்களைச் சந்தித்த மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, மீண்டும் சந்திப்போம் என்ற உறுதியுடன் விடைபெற்றனர்.















