சென்னை :
திருக்குறளில் இடம்பெறும் அறக் கொள்கைகளிலிருந்து வந்த உந்துதலால்தான் தேசிய கல்விக் கொள்கை (NEP) உருவாகியதாக தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மேற்கு மாம்பலத்தில் உள்ள திருவள்ளுவர் திருநாள்கழகம் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், திருக்குறளின் முக்கியத்துவம் குறித்து விரிவாக பேசினார்.
“பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர். திருக்குறளின் கருத்துகளை அவர் நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களுக்கு திருக்குறளே உந்துதலாக இருக்கிறது,” என்று ஆளுநர் ரவி கூறினார்.
“‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ எனும் குறளின் அடிப்படையில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரே உள்ளார்,” என்றும் அவர் கூறினார்.
70 ஆண்டுகளாக நாட்டில் பிரிட்டிஷ் பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றி வந்தோம். அது நம் மாணவர்களின் அறிவை வளர்க்க அதிகம் உதவவில்லை என்றும், புதிய கல்விக் கொள்கை இந்திய சிந்தனையையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கக் கூடியது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனுடன், தமிழ்நாடு ராஜ்பவனின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், திருக்குறளை தர்ம சாஸ்திரம் மற்றும் நீதி சாஸ்திரத்தின் நித்திய சங்கமம் என ஆளுநர் விவரித்துள்ளார். திருவள்ளுவரை சனாதன தர்மத்தின் தலைசிறந்த புலவர்களில் ஒருவராக அவர் எடுத்துரைத்தார்.
தமிழும் திருக்குறளும் உலகளவில் பரவ, பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஆளுநர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். “மனிதகுலத்தின் நன்மைக்காக வளர்ச்சியைந்த பாரதத்தை வழிகாட்டும் சக்தியாக திருக்குறளை அதன் ஆன்மிக மகத்துவத்தில் மீட்டெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.