மதுரை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் ஒரு செயல் சமூகவலைத்தளங்களில் விவாதத்துக்கு இடமளித்திருக்கிறது. மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அவர் தரிசனம் செய்தபோது நெற்றியில் திருநீர் பூசிய நிலையில் வெளியே வந்தார். பின்னர் ஒரு தம்பதியுடன் செல்பி எடுக்கும்போது அவர் திருநீறை கையால் அகற்றிய வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, “சனாதன எதிர்ப்பு மாநாடு” நடத்தியவராக இருப்பதால், திருமாவளவன் இந்துக்களுக்கு எதிரானவர் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு பதிலளித்த திருமாவளவன், “திருநீறை நெற்றியில் வைத்துக்கொண்டுதான் கோவிலில் இருந்து வெளியே வந்தேன். சுமார் அரை மணி நேரம் வரை அது இருந்தது. நாள் முழுவதும் திருநீறுடன் இருக்க முடியாது. செல்பி எடுக்கும் போது என் முகம் எப்படி இருக்கும் என்பதைக் கவனித்து அழித்தேன்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தக்கூடிய செயல்கள் எதையும் நான் ஆதரிக்க மாட்டேன். முருகன் பெயரில் நடைபெறும் மாநாடுகள், இந்துத்துவ அரசியலை வலுப்படுத்தும் முயற்சிகள். தமிழ் மரபைத் தழுவிய குடமுழுக்கு விழாவை நாங்கள் ஆதரிக்கிறோம்” எனவும் தெரிவித்தார்.
இதன் மூலம் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கிறார். இருந்தாலும், இந்த வீடியோவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.