சமயபுரத்தில் பூச்சொரிதல் விழா கோலாகலத் தொடக்கம்: பக்தர்களுக்காக அம்மனே மேற்கொள்ளும் 28 நாள் ‘பச்சை பட்டினி’ விரதம் ஆரம்பம்!

திருச்சி மாவட்டத்தின் ஆன்மீக அடையாளமாகவும், தமிழகத்தின் முதன்மை சக்தி ஸ்தலமாகவும் விளங்கும் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், உலகப்புகழ் பெற்ற பூச்சொரிதல் விழா இன்று அதிகாலை மங்கள இசை முழங்கத் தொடங்கியது. உலக நன்மைக்காகவும், தன்னை நாடி வரும் பக்தர்கள் பிணி மற்றும் நோய் நொடிகள் இன்றி பல்லாண்டு வாழவும், அன்னை மாரியம்மனே மேற்கொள்ளும் “பச்சை பட்டினி” விரதம் இன்று முதல் அமலுக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, பங்குனி மாதக் கடைசி ஞாயிறு வரை எனச் சுமார் 28 நாட்கள் இந்தத் தனித்துவமான விரத நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் வேறு எந்த அம்மன் ஆலயங்களிலும் இல்லாதவாறு, தன் பிள்ளைகளுக்காகத் தாயே பட்டினி கிடக்கும் இந்த அரிய நிகழ்வு சமயபுரத்தின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.

இந்த 28 நாட்களும் அம்மனுக்குத் தளிகை நைவேத்தியங்கள் மற்றும் அன்னம் படைக்கப்படாது. மாறாக, கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைத்து உடல் குளிர்ச்சியைத் தரும் இளநீர், கரும்புச்சாறு, பானகம், நீர்மோர் மற்றும் துள்ளுமாவு ஆகியவை மட்டுமே அன்னைக்கு நைவேத்தியமாகச் சமர்ப்பிக்கப்படும். இந்த விரத காலத்தின் ஐந்து முக்கிய ஞாயிற்றுக்கிழமைகளிலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விதவிதமான நறுமண மலர்களைக் கொண்டு வந்து அன்னைக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்துவர். முதல் நாளான இன்று அதிகாலை, விக்னேஸ்வர பூஜை, புண்யாவாஜனம் மற்றும் வாஸ்து சாந்தி உள்ளிட்ட ஆகம விதிகளின்படி சடங்குகள் நடைபெற்றன. காலை 6:30 மணி முதல் 8:00 மணிக்குள் அம்மனுக்குக் காப்பு கட்டும் வைபவத்துடன் பூச்சொரிதல் விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில், கோயில் யானை மாரியப்பன் மீது மலர் கூடைகள் வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், குழு உறுப்பினர்கள் ராஜ சுகந்தி, பிச்சைமணி லட்சுமணன், இணை ஆணையர் சூர்ய நாராயணன், நகரச் செயலாளர் ராஜசேகரன் மற்றும் பணியாளர்கள் மலர் தட்டுகளைத் தலையில் சுமந்தபடி நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து, மூலஸ்தானத்தில் உள்ள மாரியம்மனுக்கு மலர்களைச் சாற்றி வழிபட்டனர். விழாவிற்கான விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை அறங்காவலர் குழுவும் கோயில் அதிகாரிகளும் சிறப்பாகச் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஓம் சக்தி, பராசக்தி” என்ற கோஷங்களுடன் நீண்ட வரிசையில் நின்று அன்னை மாரியம்மனைத் தரிசித்துச் சென்றனர்.

Exit mobile version