மதுரை மாவட்டம் திருவேடகத்தில் வைகையாற்றுப் படித்துறை அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய மேல்நிலை குடிநீர் தொட்டியால் எந்த நேரமும் பெரும் விபத்து நிகழக்கூடும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே மேலோங்கியுள்ளது. பயன்பாடின்றி கைவிடப்பட்ட இந்தத் தொட்டி, தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியிருப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
திருவேடகம் வைகையாற்றுப் படித்துறையில் அமைந்துள்ள புகழ்பெற்ற துர்க்கையம்மன் கோயில் அருகே, கற்களால் கட்டப்பட்ட பழமையான மேல்நிலை குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை ஒரு காலத்தில் பூர்த்தி செய்து வந்த இந்தத் தொட்டி, காலப்போக்கில் பராமரிப்பின்றி சிதிலமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டிலிருந்து கைவிடப்பட்டது. தற்போது இந்தத் தொட்டியின் மேல் பகுதியில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து புதர் போலக் காட்சியளிப்பதுடன், கட்டிடத்தின் பல இடங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்தத் தொட்டியை அகற்ற அதிகாரிகள் முன்வராதது வேதனைக்குரியது.
இந்த ஆபத்தான நிலைக்கு மத்தியில், தொட்டியின் கீழ்ப்பகுதியில் உள்ள அறை தற்போது மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. அறையின் உள்ளே மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் வாட்டர் கேன்கள் மலை போலக் குவிந்து கிடக்கின்றன. மேலும், அந்த அறையின் தரையில் திடீரென 5 அடி ஆழத்திற்குப் பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இரவு நேரங்களில் இப்பகுதியில் முறையான மின்விளக்கு வசதி இல்லாததால், அந்தப் பகுதிக்குத் தெரியாமல் வருபவர்கள் இந்தப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஆற்றுப் படித்துறைப் பகுதியில் இத்தகைய சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவது பக்தர்களையும் பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “பாழடைந்த இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்த மதுக்கூடம் குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை” என அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, வாடிப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஆபத்தான குடிநீர் தொட்டியை அடியோடு அகற்றி, அப்பகுதியைச் சீரமைக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















