மயிலாடுதுறையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திரு இந்தளூர் ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திரு இந்தளூரில் பரிமள ரெங்கநாதர் ஆலயத்திற்கு தென்கிழக்கு திசையில் கிழக்கு நோக்கிய கோவிலில் சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் சமேத ஸ்ரீ ராமர் ஆலயம் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த ஆறாம் தேதி விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இரண்டு கால யாக சாலை பூஜைகள் நிறைவுற்று மகாபூரணாகுதி, தீபாரதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். தொடர்ந்து விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று மூலவருக்கு புனிதநீரால் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நகர் மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
