“மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு அநீதி செய்கிறது” : வைகோ கடும் குற்றச்சாட்டு

திருச்சி – மதுரை இடையே போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமூக ஒற்றுமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜனவரி 2 முதல் 12 வரை ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொள்ள உள்ளார். இதற்கான தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விழுப்புரம் மண்டலத்தைச் சேர்ந்த இளைஞரணி, மாணவரணி மற்றும் தொண்டரணியிலிருந்து நடைபயணத்தில் பங்கேற்க உள்ளவர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி சிதம்பரம் அருகே ஆணையம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. தொண்டர்கள் முதலில் உயரம், எடை உள்ளிட்ட உடல் பரிசோதனைகளை முடித்தனர். அதன் பின்னர் ஒவ்வொருவருடனும் வைகோ நேரடியாக பேசிச் செவ்வி நடத்தி, அவர்களின் கல்வி, தொழில், பெற்றோரின் அனுமதி போன்ற விபரங்களை கேட்டறிந்து தேர்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண்கள் மற்றும் மாணவர்களிடையே அதிகமான அச்சம் நிலவுவதற்குக் காரணம் போதைப்பொருள் எளிதில் கிடைக்கும் சூழல் தான். பள்ளி – கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனை நடைபெறுவது மிகப்பெரிய ஆபத்து. அதை முற்றிலும் ஒழிக்க கடுமையான சட்டம் அவசியம் என்பதைத் தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி இருக்கிறோம்” என்றார்.

சாதியினால் ஏற்படும் பிரிவினை குறித்து பேசும் அவர், “கல்வி நிலையங்களில் சாதி வேற்றுமையை தூண்டும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இத்தகைய மனப்போக்கை மாற்றுவதற்கும் சமத்துவத்தை வலியுறுத்துவதற்கும் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல கல்லூரி மாணவர்கள் இதில் சேர விரும்புவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்த அவர், “தமிழகத்துக்கு உரிய பல திட்டங்களில் மத்திய அரசு அநீதி செய்கிறது. மதுரை, கோவையை விட மக்கள் தொகை குறைவாக உள்ள நகரங்களில் கூட மெட்ரோ ரயில் வசதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு நீதி மறுக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தத்திலும் வெளிநாடுகளில் இருந்து பெயர்கள் சேர்த்தலும், உள்ளவர்களை நீக்குவதிலும் மோசடிகள் நடக்கின்றன” என்று குற்றம்சாட்டினார்.

Exit mobile version