நான்கு தலைமுறைகள் கண்ட ‘நூற்றாண்டு நாயகி’: கோவில்பட்டி அருகே 100-வது பிறந்தநாளை வாரிசுகள் புடைசூழ கொண்டாடிய மூதாட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிளவிபட்டி கிராமம், நேற்று ஒரு நெகிழ்ச்சியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டத்திற்குச் சாட்சியாக அமைந்தது. அக்கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி கிருஷ்ணம்மாள், தனது 100-வது பிறந்தநாளை ஐந்து மகன்கள், இரண்டு மகள்கள், 20 பேரன் பேத்திகள் மற்றும் 24 பூட்டன் பூட்டிகள் என நான்கு தலைமுறை வாரிசுகள் புடைசூழ உற்சாகமாகக் கொண்டாடினார். கூட்டுக்குடும்ப கலாச்சாரம் மறைந்து வரும் தற்காலச் சூழலில், ஒரு ஆலமரம் போலத் தனது வாரிசுகளை ஒன்றிணைத்த கிருஷ்ணம்மாளின் இந்த நூற்றாண்டு விழா கிராம மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த கருப்பசாமி – கிருஷ்ணம்மாள் தம்பதியரின் வாரிசுகள் இன்று அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பல்வேறு உயரிய துறைகளில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் புகழுடன் விளங்கி வருகின்றனர். வாழ்வாதாரத்திற்காகப் பல்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்றிருந்த ஒட்டுமொத்த உறவுகளையும், இந்த 100-வது பிறந்தநாள் விழா ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளது. உறவுகளின் சங்கமமாக மாறிய இந்த விழாவில், கிருஷ்ணம்மாள் கேக் வெட்டித் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த விழாவைக் கொண்டாடிய அவரது பேரன் பேத்திகள் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், “எங்கள் குடும்பத்தின் ஆணிவேராகத் திகழும் பாட்டியின் பிறந்தநாள், எங்களுக்கு எவ்வளவு பெரிய ரத்த சொந்தங்கள் இருக்கின்றன என்பதை உணர்த்தியுள்ளது. வெளிநாடுகளிலும், பிற மாநிலங்களிலும் பணியாற்றி வரும் நாங்கள், பாட்டிக்காகக் கிளவிபட்டியில் ஒன்று கூடியது மறக்க முடியாத அனுபவம். நான்கு தலைமுறைகளைக் கண்ட எங்கள் பாட்டி, ஐந்தாவது தலைமுறையையும் காணத் தயாராக இருக்கிறார்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

நூறு வயதைக் கடந்த நிலையிலும் ஆரோக்கியத்துடன் இருக்கும் கிருஷ்ணம்மாளிடம், அவரது வாரிசுகள் மற்றும் கிராம மக்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் பாட்டியுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துத் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். கிராமிய வாழ்வியலும், சத்தான உணவும், மனநிறைவான குடும்பச் சூழலுமே கிருஷ்ணம்மாளின் நீண்ட ஆயுளுக்கு ரகசியம் என்று அப்பகுதி பெரியவர்கள் கூறுகின்றனர். இந்த விழா வெறும் பிறந்தநாள் கொண்டாட்டமாக மட்டுமில்லாமல், சிதறிப் போகும் உறவுகளை ஒன்றிணைக்கும் ஒரு பாலமாகவும் அமைந்தது.

Exit mobile version