நெல்லை – திருச்செந்தூர் பாதையில் 200 ஆண்டு பழமையான கல் மண்டபங்கள் சொல்லும் வியக்கவைக்கும் ரகசியம்!

நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரையாகச் செல்வது வழக்கம். இன்று நாம் வாகன இரைச்சல்களுக்கு இடையே கூகுள் மேப் உதவியுடன் பயணிக்கும் இதே சாலையில், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் மிகத் துல்லியமான திட்டமிடலுடன் ஒரு ‘ஆன்மீக நெடுஞ்சாலையை’ உருவாக்கியிருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நெல்லை முதல் திருச்செந்தூர் வரையிலான பாதையில் சீரான இடைவெளியில் அமைந்துள்ள பழமையான கல் மண்டபங்கள், முன்னோர்களின் அறப்பணிக்கும், பக்தர்களின் மீதான அவர்களின் அக்கறைக்கும் மவுன சாட்சிகளாக இன்றும் நின்று கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் அருகே உள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவி ரமணா மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் ஒரு வியக்கத்தக்கத் தகவல் கிடைத்துள்ளது. அங்குள்ள ஒரு பழமையான கல் மண்டபத்தில் கண்டறியப்பட்ட 11 அடி உயரக் கல்வெட்டில், சென்னை கோமளேஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த குமார முனியப்பன் மற்றும் அவரது தாயார் தெய்வானை ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த மண்டபத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று நெல்லை மாநகரில் அரசு பல்நோக்கு மருத்துவமனை அருகிலும், ஆழ்வார்திருநகரியிலும் இன்றும் இத்தகைய கல் மண்டபங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, நெல்லையில் இருந்து புறப்படும் ஒரு பக்தர் எப்போது சோர்வடைவார் என்பதைக் கணக்கிட்டே 3 முதல் 5 கிலோமீட்டர் இடைவெளியில் இந்த மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை அரசு உயர்மருத்துவமனை அருகிலுள்ள மண்டபத்தைத் தாண்டினால், அடுத்து வி.எம்.சத்திரம் ஆரோக்கியநாதபுரம் மண்டபம் வருகிறது. அதைத் தொடர்ந்து நாயக்கர் காலத் தூண்களைக் கொண்ட கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில், பின்னர் செய்துங்கநல்லூர் சிவன் கோயில், தாமிரபரணி ஆற்றை ஒட்டிய கருங்குளம், அதற்கடுத்து ஆழ்வார்திருநகரி கல்மண்டபம் மற்றும் ஆதிநாதப் பெருமாள் கோயில் எனத் தொடர்ச்சியாக இந்த ஆன்மீகப் பாதை நீள்கிறது. நம் முன்னோர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், ஆன்மீக வரலாற்றைப் பாதுகாக்கும் வகையிலும், தற்போது கவனிப்பாரின்றிப் பாழடைந்து கிடக்கும் இந்தக் கல் மண்டபங்களை அரசு உடனடியாகப் புனரமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version