மயிலாடுதுறை அருகே கழனிவாசல் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தின் 9 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வாயில் 16 அடி நீள அலகு குத்தியும், பக்தர்கள் குழந்தைகளை தூக்கி வந்தும் ஏராளமானோர் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கழனிவாசல் கிராமத்தில் வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தரும் திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் 9 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 4 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் விழா தொடங்கியது. இதனையடுத்து தருமர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரௌபதி அம்மன் பிறப்பு, திருக்கல்யாணம், துகில் உரிதல், கிருஷ்ணன் தூது, அரவான் பலியிடுதல், கர்ணன் மோட்சம் உள்ளிட்ட பல்வேறு ஐதீக நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில் தீமிதி திருவிழாவான இன்று காலை பால்குடம் எடுத்தல், துரியோதனன் படுகளம் முடிவடைந்தது. தொடர்ந்து மாலை கடலாழி ஆற்றங்கரையில் இருந்து பம்பை மேளம் முழங்க பச்சைக்கிளி, பவளகாளி, சிவப்பு காளி ஆட்டத்துடன் சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் அலகு காவடி எடுத்தும், வாயில் 16 அடி நீள அலகு குத்திய பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். மேலும், கண்கவர் வானவேடிக்கை பொதுமக்களை உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.
