சிவகங்கை :
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துக்கொள்ளப்பட்ட கோவில் பாதுகாப்பு ஊழியர் அஜித்குமார் மரணமான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நடைபெறும் நீதிமன்ற விசாரணை இன்று காலை 8 மணி என்ற நேரத்திலேயே துவங்கியுள்ளது.
கடந்த ஜூன் 27ம் தேதி, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பக்தை நிகிதாவின் காரில் இருந்து, 9.5 பவுன் தங்க நகை மற்றும் பணம் காணாமல் போனது. இது தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார், கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த அஜித்குமாரை விசாரித்தபோது அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக, மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு வரும் ஜூலை 8ம் தேதி வரை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக, நீதிபதி இன்று காலை திருப்புவனம் காவல் நிலையத்துக்கு திடீரென வருகை தந்து விசாரணை மேற்கொண்டார். இதில் ஏ.டி.எஸ்.பி. சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்.ஐ. சிவப்பிரகாசம், எஸ்.எஸ்.ஐ. சிவகுமார் உள்ளிட்ட போலீசார் ஆஜராகினர்.
இன்று நடைபெறும் விசாரணையின் நான்காவது நாளில், திருட்டு புகார் அளித்த நிகிதா மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் ஆகியோர் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.